கடந்த வெள்ளிக்கிழமை அன்று கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்தது.
இதனையடுத்து, சென்னை ஐஐடியில் சூரஜ் எனும் மாணவர், மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழாவினை நடத்தினார். சுமார் 80 மாணவர்கள் இணைந்து இந்த மாட்டிறைச்சி நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த பிஹெச்டி மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது வலது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சில அமைப்பைச் சேர்ந்தவர்கள், சுராஜை தாக்கியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.