சென்னையின் தெற்கே 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாமண்டூரில் சென்னைக்கு 2-வதாக விமானநிலையம் அமைக்கப்பட இருக்கிறது.
இதற்காக தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தின் ஜிஜி ஜார்ஜ் அரசிடம் தனது புரபோஸலை அளித்திருக்கிறார். அரசின் அனுமதி கிடைத்ததும், இதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.
இது குறித்துப் பேசிய ஜிஜி, ”கிரீன்பீல்டு ஏர்போர்ட் 3,500 ஏக்கரில் ரூ.4,500 கோடி மதிப்பில் அமைக்கப்பட இருக்கிறது. மாநில அரசு உரிய அனுமதி அளிக்கும் பட்சத்தில், இதன் முதல் கட்டப் பணிகள் வரும் 2022-23-க்குள் நிறைவடையும்.
மத்திய கிழக்கைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவருடன், முதற்கட்டமாக இதற்கு 100 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம்” என்றார்.
முன்னதாக கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலாவில் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை பரிந்துரை செய்திருந்தார் ஜிஜி. ஆனால் சூழலியல் பாதிப்புகள் காரணமாக அந்த திட்டத்தை ரத்து செய்து விட்டது கேரள அரசு.