கடந்த சில நாட்களாக சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், தியாகராயர் நகர் வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோன்று, வடசென்னையில் திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கம் பகுதியில் 3 செ.மீ மழையும், ஐஸ் ஹவுஸ், மணலி, எம்.ஆர்.சி நகர் ஆகிய பகுதிகளில் 2.செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மதுரவாயல், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம் இங்கே..
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 1,970 மில்லியன் கனஅடியாகவும், 1, 081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 110 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது
500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 353 மில்லியன் கனஅடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil