கடந்த வாரம் சனிக்கிழமையன்று 'தி சென்னை சில்க்ஸ்' கட்டிடத்தின் கீழ் தளமானது 'ஜா கட்டர்' இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தில் சில பகுதி அந்த இயந்திரம் மீது சரிந்து விழுந்ததில் சரத் எனும் ஜா கட்டர் இயந்திர ஓட்டுநர் பரிதாபமாக பலியானார். இதையடுத்து அந்த கட்டிடத்தின் இடிப்புப் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஒரு வார காலத்திற்கு பின் 'சென்னை சில்க்ஸ்' கட்டிடத்தின் இடிக்கும் பணி இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலத்தால் சூழப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என முதலில் அஞ்சப்பட்டது.
ஆனால், இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து பேட்டியளித்த கட்டட இடிக்கும் பணி ஒப்பந்ததாரர் பீர் முகமது, "கட்டடம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இன்றுடன் கட்டிட இடிப்பு பணி முழுவதுமாக நிறைவுபெறும்" என்றார்.