”நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை, அப்படியே நீட் தேர்வு நடத்தினாலும் மாநில பாடத்திட்டத்தின் பிளஸ் டூ பாடங்களின் அடிப்படையிலேயே கேள்வித்தாளை உருவாக்க வேண்டும்”, என அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாவட்ட மாணவி அனிதா, வெள்ளிக்கிழமை தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததால், பிளஸ் டூ தேர்வில் 196.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருந்தும் மாணவி அனிதாவால் மருத்துவ படிப்பில் இடம் பெற முடியவில்லை. இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் குறிப்பிடத்தக்கது. தன்னால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லையே என்ற மன வேதனையில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரியில் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்த அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாணவி அனிதாவின் மரணத்திற்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டாம். முதலமைச்சரும் துனை முதலமைச்சரும் பதவி விலகினாலே எல்லாம் சரியாகிவிடும். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை, அப்படியே நீட் தேர்வு நடத்தினாலும் மாநில பாடத்திட்டத்தின் பிளஸ் டூ பாடங்களின் அடிப்படையிலேயே கேள்வித்தாளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு வரும் ஆண்டுகளில் தமிழக அரசின் தேவை மற்றும் கோரிக்கைகளை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில், தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மாநிலத்தில் இத்தகைய துர் மரணங்கள் நிகழக்கூடாது.”, என கூறினார்.
மேலும், எம்.எல்.ஏ.க்களின் சந்திப்புக்கு பிறகு அரியலூரில் உள்ள மாணவி அனிதாவின் வீட்டுக்கு செல்ல உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.