காசிமேடு மீனவர்கள் மறியல் நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதில் அரசியல் தூண்டுதல் இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
சென்னையில் ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு உட்பட்ட கடலோரப் பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கு சீன இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் சென்று மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதால், நாட்டுப் படகு மீனவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக மீன்வளத்துறைக்கு மீனவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த சூழலில் இன்று (23-ம் தேதி) காலை 10.30 மணியளவில் சென்னை காசிமேடு பகுதியில் திரளான மீனவப் பெண்களும் ஆண்களும் கூடி மறியல் போராட்டம் நடத்தினர். மீன்பிடிப் படகுகளி சீன இயந்திரம் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். அமைச்சர் ஜெயகுமாரின் உறவினர்கள் மேற்படி சீன இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு பின்னணியில் இருப்பதாகவும் புகார் கூறினர்.
மீனவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் திடீர் போராட்டம் நடத்தியதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறியல் நடத்திய பெண்கள் உள்பட அனைவர் மீதும் போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். அப்போது சில பெண்களை போலீஸார் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் சில பெண்கள் சாலையில் படுத்துக்கொண்டு அசைய மறுத்தனர். பிறகு பெண் போலீஸார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
இந்த திடீர் போராட்டத்தின் பின்னணியில் அதிமுக உள்கட்சி விவகாரம் இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட ஏரியா இது! இங்கு இரு தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன், நிலவேம்பு கசாயம் வழங்கினார். அதில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின்போது, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீனவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறாரே?’ என நிருபர்கள் மதுசூதனனிடம் கேட்டனர். அதற்கு பதில் தெரிவித்த மதுசூதனன், ‘ஆர்.கே.நகரில் எப்போதுமே மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவரை அதிமுக நிறுத்தியதில்லை. இதே ஜெயகுமார், மீனவர்களுக்காக என்ன செய்தார்? சீன இயந்திரங்களை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஆதரவாக ஜெயகுமார் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். என்னை அரசியலில் வளரவிடாமல் தடுப்பதே ஜெயகுமாரின் வேலை’ என காட்டமாக கூறினார் மதுசூதனன்.
இந்தச் சூழலில் ஜெயகுமார் மீதான எதிர்ப்பாகவும் இந்த திடீர் மறியல் போராட்டத்தை அப்பகுதியினர் கூறுகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் நெருங்கும் சூழலில், அங்கு கோஷ்டி பூசலில் ஒரு தரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பு படு தீவிரமாக இயங்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் மதுசூதனனை அங்கு வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை! ஆனால் புதிதாக இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என அமைச்சர் ஜெயகுமார் பரிந்துரை செய்வதாக தெரிகிறது. இதில் வேட்பாளர் தேர்வில் யார் ஜெயித்தாலும், இன்னொரு தரப்பு எதிர்த்து வேலை செய்யத் தயங்காது என்கிறார்கள்.
வழக்கமாக இந்தப் பகுதியில் மீனவக் குப்பங்கள்தான் அதிமுக-வின் பிரதான வாக்கு வங்கி! அதில் ஓட்டை விழுவதை திமுக குஷியாக கவனித்து வருகிறது.