தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக்கோரி, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய் கிழமை பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் திங்கள் கிழமை டெல்லி சென்றனர்.
முன்னதாக, அமைச்சர்கள் ஆறு பேரும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்து, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது மத்திய அமைச்சர்கள், “தமிழகத்திற்கு ஆதராவாக, கனிவுடன் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக” உறுதி அளித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய் கிழமை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். மேலும், நீட் தேர்விலிருந்து விலக்களிக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பின்போது அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக, தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். அப்போது, நதிகள் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அய்யாக்கண்ணு முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.
இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு தமிழக அரசின் நிதி நிலைமை தற்போது சரியில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.