/tamil-ie/media/media_files/uploads/2018/03/a572.jpg)
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திட்டம் என்பது, காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட 'திட்டம்' என்பது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவேரி மேலாண்மை வாரியம் மாற்றி காவேரி நீர் முறைப்படுத்தும் குழு தான் என்றும், அவ்வாணையில் அதிகார வரம்புகளுடன் இவ்வமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக உள்ள நிலையில், காவேரி மேலாண்மை வாரியத்தை, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழி இல்லை என தமிழக அரசு சார்பில், மத்திய அரசு கூட்டியுள்ள ஆலோசனை கூட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் சார்பில் 9.3.2018 அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில், மேற்கொண்ட கருத்துகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.
காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
காவேரி நதிநீர் பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவேரி நீரை ஆதாரமாகக் கொண்ட தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலன்களை பேணிப் பாதுகாக்கவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்ளும்" என்று முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.