தங்களை வீட்டுக்கு அனுப்புவதாக கூறிவரும் தினகரன், மாமியார் வீட்டுக்கு செல்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், ஆளும் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறும்போது, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், எங்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறிவரும் டிடிவி தினகரன், சிறைவாசம் செல்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தங்கசாலையில் அண்ணாவின் 109- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, டிடிவி தினகரனை மாமியார் வீட்டுக்கே அனுப்பிவிடுவோம் என்று பேசினார்.
மேலும், ஜெயலிதா இருக்கும் வரை சென்னை பக்கமே வந்திராத டிடிவி தினகரன், அனைவருக்கும் அவர்தான் சீட் கொடுத்தது போல பேசிவருகிறார். ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற டிடிவி தினகரனின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. டிடிவி தினகரன் விரைவிலேயே சிறைவாசம் செல்வார் என சூசமாக குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி பேசும்போது: எம்.ஜி.ஆர் நிறுவிய இந்த கட்சியை ஜெயலலிதா பாதுகாத்து வந்தார். இந்த நிலையில், தற்போது அதிமுக ஆட்சிக்கு துரோகம் இழைக்கிறார் டிடிவி தினகரன். அவர் எங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார். நான் இப்போது தான் வீட்டில் இருந்து வருகிறேன். திரும்ப வீட்டுக்கு தான் போவேன். ஆனால் வீட்டில் இருந்து வந்த டிடிவி தினரகன், விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்லப் போகிறார். அது எந்த மாமியார் வீடு என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் இருந்து வந்த அனைவருமே திரும்பி வீட்டுக்கு தான் செல்வார்கள். ஆனால், டிடிவி தினகரன் திரும்பி வீட்டுக்கு செல்ல மாட்டார். ஆண்டவனும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. யாரெல்லாம் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தார்களோ அபவர்கள் தப்பிக்க முடியாது. அவர்களை வாட்டி வாட்டி வதைக்கப்படுகிறார்கள். ஜெயலலிதாவின் ஆத்மாவிடம் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது என்று கூறினார்.