நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.
இதற்காக தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலமாக பிரித்து, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், தேவையையும் கேட்க தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் இன்று (புதன்கிழமை) துவங்கியது.
இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய, திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 தி.மு.க. மாவட்டத்துக்கு உட்பட்ட டெல்டா மாவட்டங்களில் 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பயிற்சியின் நிறைவில் மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார்.
இந்தப் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்ப்பதற்காக முதவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.
திமுக தலைவருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எஸ்.எஸ்.சிவசங்கர், மாநகராட்சி மேயர் அன்பழகன், தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் கடைபிடிப்பதையொட்டி திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் ரவுண்டானாவில் மேஜர் சரவணன் திருவுருவபடத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர், எம் பி ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட திமுக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முதல்வர், மாலை 5 மணிக்கு ராம்ஜி நகரில் நடைபெற்று வரும் டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.
இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு அங்கு தங்குகிறார். பின்னர் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி கேர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி-கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்லும் முதல்வர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகள் முடிந்து கார் மூலம் மீண்டும் திருச்சிக்கு வந்து திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.