ஸ்டாலின் ராமநாதபுரம் பயணம்- இணையத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்ட பாஜக ஒன்றிய தலைவர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து இணையதளத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்ட பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கம் வீட்டு காவலில் போலீசார் கைது செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை மாலை மதுரை வந்தார். அங்கு இரவு 7 மணிக்கு முனிச்சாலை பகுதியில் பாடகர் சவுந்திரராஜன் சிலையை திறந்து வைத்தார்.
Advertisment
தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக, மதுரையிலிருந்து காரில் ராமநாதபுரத்துக்கு பிற்பகல் 12 மணியளவில் வருகை தரும் முதல்வா், இங்குள்ள அரசு விருந்தினா் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
பின்னா், பேராவூரில் நடைபெறும் தென் மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டம் முடிவடைந்த பின்னா் ராமேஸ்வரத்துக்குச் செல்லும் முதல்வா், பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையில் மண்டபத்தில் நடைபெறும் மீனவா் நல மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது, அரசு சார்பில் மீனவா்களுக்கு உதவித் தொகை, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிக் கடன், இலவச பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்குகிறார். மாநாடு முடிந்து மதுரை வரும் முதல்வர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்வரின் வருகையொட்டி தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் மதுரை, ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து இணையதளத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்ட பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவர் முத்துலிங்கம், வீட்டு காவலில் போலீசார் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”