சென்னை மாநகரின் மற்ற பகுதிகளோடு மெட்ரோ ரயில் சேவையின் மூலம் வடசென்னை பகுதி விரைவில் இணைய உள்ளது.
வடசென்னை பகுதியின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் நவம்பர் மாதத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், ரயில் தடம் மட்டும் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதாக மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் சேவையின் முதற்கட்ட விரிவாக்கத்தின் மூலமாக, வடசென்னை பகுதி, சென்னையின் மற்ற பகுதிகளுடன் இணைய உள்ளது. விம்கோ நகர் பகுதியில் இருந்து தண்டையார்பேட்டை வரையிலான தடம் மேலடுக்கு ரயில் பாதையாகவும், வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதை தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருவொற்றியூர் ஹை ரோடு - தண்டையார்பேட்டை வழித்தடத்தில் அதிகளவில் போக்குரவத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது. தற்போது டோல்கேட் வரை செல்லும் வாகனங்கள், பின் திருவொற்றியூர் ஹைரோடு, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு வழியாக செல்கிறது. பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் என அனைத்து வகை வாகனங்களும் இந்த வழியே செல்வதால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து நெரிசல் கணிசமான அளவு குறையும் என்று அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.பஸ்கள் மற்றும் பொதுவாகனங்கள் செல்லும் பாதையிலேயே மெட்ரோ ரயில் ஸ்டேசன்களும் அமைய உள்ளதால், நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் போக்குவரத்து பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.