கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்களை விசாரித்து தேர்தல்களை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரீசிலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினரை வெற்றி பெறச் செய்யும் வகையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாகக் கூறி, தேர்தலை ரத்து செய்யக் கோரி வேலூர் மாவட்டம், தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 31 சங்கங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களை கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கவேண்டும், ஆணையம் தேர்தல்களை ரத்து செய்வது தொடர்பாக பரீசிலித்து முடிவெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் முடிவை வரும் செவ்வாய்க்கிழமை அறிக்கையாக அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.