நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசப்பட்ட விவகாரம்: மனைவி பலி; கணவர் மீது கொலை வழக்குப் பதிவு
கோவை நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்காக வந்த மனைவி மீது கணவர் ஆசிட் வீசிய விவகாரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் வீசினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, தன் மீது உள்ள வழக்கு குறித்த விசாரணைக்காக முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரது கணவர் சிவா ஆசிட் வீசினார்.. மனைவி மீது ஆசிட் வீசிய சிவாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீசார் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Advertisment
80 சதவீதம் தீக்காயங்களுடன் கவிதா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உடற்கூராய்வுக்குப் பின் கவிதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“