இன்னும் வெறும் கையால் வேலை: கோவை தூய்மை பணியாளர்களுக்கு விமோசனம் எப்போது?
பாதாள சாக்கடைக்குள் இறங்கி உள்ளே இருக்கக்கூடிய மண் குப்பைகளை எந்தவிதமான உபகரணங்களும் இல்லாமல் வயதான முதியோர்கள் கையால் அள்ளி வெளியே கொட்டி வருவது பார்ப்பவர்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.
கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 100 வார்டுகளிலும் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு கோவை மாநகராட்சி சரியான உபகரணங்களை வழங்கி உள்ளதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைகள் தோண்டப்பட்டு தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர். தற்போது கோவை மாநகரப் பேருந்து நிலையம் முன்பு பாதாள சாக்கடை தோண்டப்பட்டு ஐந்துக்கும் மேற்பட்ட துப்புரவு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடையில் அடைத்துள்ள மண் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு சரியான உபகரணங்கள் கொடுக்கப்படாததால் தங்களது கைகளிலே பாதாள சாக்கடையை சுத்தம் படுத்தும் பணி அப்பகுதியில் உள்ள பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. பாதாள சாக்கடைக்குள் இறங்கி உள்ளே இருக்கக்கூடிய மண் குப்பைகளை எந்தவிதமான உபகரணங்களும் இல்லாமல் வயதான முதியோர்கள் கையால் அள்ளி வெளியே கொட்டி வருவது பார்ப்பவர்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்ற போது அழைப்பை எடுக்காமல் துண்டித்து விட்டார்கள். மேலும் கோவை மாநகராட்சி சரியான உபகரணங்களை துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு வழங்கி உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பாதாள சாக்கடை தூய்மை பணியில் வேலை செய்யக்கூடிய நபர்கள் மாநகராட்சி நியமனம் செய்த துப்புரவு பணியாளர்களா அல்லது ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வரப்பட்ட நபர்களா என்கிற தொடர் கேள்வி எழுகிறது.