Coimbatore Collector hand over House for destitute woman with differently-abled son Tamil News
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Advertisment
கணவரை இழந்து மாற்றுத் திறனாளி மகனுடன் ஆதரவு இன்றி தவித்த பெண்ணுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ்மலுமிச்சம்பட்டி திட்டப் பகுதி குடியிருப்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை வீடு தேடி சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் நேரில் வழங்கினார்.
கோயமுத்தூர் செட்டிபாளையம், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தனது 14-வயது மனவளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத்திறன் கொண்ட மகன் ராமசாமியுடன், ஷீலா (44) வசித்து வருகிறார். இவரது கணவர் கோபால் 13ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட, தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த ஷீலாவுக்கும், அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கும், மணியம்மாள் (வயது 63)என்ற மூதாட்டி, தன்னுடன் தன் வீட்டிலே தங்கவைத்து, 13 ஆண்டுகளாக உதவிபுரிந்து வருகிறார்.
ஷீலாவுக்கு, மூதாட்டி உறவு முறை இல்லை என்றாலும் கூட மனித நேயத்துடன் தன்னுடன் தங்க வைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். மாற்றுதிறன் கொண்ட சிறுவனை அருகில் இருந்து எப்போதும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை என்பதால் ஷீலாவினால் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை இருந்தது.
தமிழ்நாடு அரசின் மாற்றுதிறனாளி நல உதவி தொகையே பெரியவாழ்வாதாரம். அது தவிர, ஷீலா மற்றும் அவரது மகனுக்கு உறுதுணையாக கோவையில் உள்ள ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலைக்கு ரூ.6500 ஊதியத்துடன் கடந்த அக்டோபர் மாதம் வரை மணியம்மாள் சென்று வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக பணியை விட்டு நின்றுவிட்டு தற்போது 4 ஆடுகள் வாங்கி பராமரித்து வருகிறார்.
தனது காலத்துக்கு பின்னர், ஷீலாவும், அவரது மகனும் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிப்பார்கள் என்பதால் அவர்களை அழைத்துகொண்டு நேற்று (02.01.2023), வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ஆட்சி தலைவர் அவர்களிடம் மனு அளித்தார். அவர்களின் சூழ்நிலை உடனடியாக பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், மனு அளித்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்ட பகுதி குடியிருப்பில் உடனடியாக வீடு ஒன்றை ஒதுக்கி உத்தரவு வழங்கினார்.
அந்த உத்தரவை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயனாளி ஷீலா வசிக்கும் இடத்துக்கு நேற்று (03.01.2023) நேரில் சென்று வழங்கினார். மனிதநேய அடிப்படையில் ஷீலா, அவரது மகனுக்கு உதவி செய்துஉறுதுணையாக இருந்த மணியம்மாளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பாராட்டினார்.
மேலும் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குசெலுத்த வேண்டிய ரூ.36,000 மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று(2.1.23) மாற்றுத்திறனாளி மகனுடன் வீடு கேட்டு மனு அளித்த சீலா என்பவருக்கு இன்று(3.1.23) நேரில் சென்று,மலுமிச்சம்பட்டி குடியிருப்பில் தரை தளத்தில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கிய நெகிழ்வான தருணம்.#Coimbatorepic.twitter.com/RvNMcKRKvZ
— District Collector, Coimbatore (@CollectorCbe) January 3, 2023