/indian-express-tamil/media/media_files/2025/06/21/cbe-rss-2025-06-21-17-19-52.jpg)
கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் ஜூன் 23-ஆம் தேதி, பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு, சிவவேள்வி பூஜையில் பங்கேற்கவுள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சி குறித்து பேசினர். இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொள்ளாச்சி பகுதி நிர்வாகி கோபால் உடனிருந்தார்.
அப்போது, "மேலைச் சிதம்பரம் என்று புகழ்பெற்ற பேரூர் ஆதீனத்தைத் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப் பெருமான் தோற்றுவித்தார். அவரின் அருள் வழியில் 24-ம் குரு மகாசந்நிதானமாக தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றினார். கல்வி, சமுதாயம், மருத்துவம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய பணிகளை ஆதீனம் தற்போது சிறப்பான முறையில் செய்து வருகிறது.
பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானங்கள், உலகெங்கும் விரிந்து சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நெறி வழிபாட்டின் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களின் இல்லங்களில் திருவிளக்கு வழிபாடுகளை நடத்தியது, பல்வேறு வகையான மக்களுக்கும் தீட்சைகளை வழங்கி அவர்களை ஆதீன கர்த்தர்களாக ஆக்கியது என அடிகளார் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். செய்ததை போலவே பல்வேறு பணிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்தார்கள்" என்று விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
ஜூன் 23-ஆம் காலை 6 மணி முதல் 7:15 மணி வரை தமிழும் வடமொழியும் ஓதி வேள்விகள் நடத்தப்படும். வேள்வியின் நிறைவாக மோகன் பகவத் சிவலிங்கத்திற்கு அபிஷேக வழிபாடுகளைச் செய்யவுள்ளார். அதைத் தொடர்ந்து, 11 மணி வரை நடைபெறும் பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
செய்தி - பி. ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.