கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; வரும் 17 ம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற இருந்தது. இதற்காக அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுக்கின்றனர்.
எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் எனவும் கடிதம் கொடுத்துள்ளோம். நாளை மறுதினம் அனுமதி மறுத்தால் வேறு தேதி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலாளரை அனுகுவோம்.
எங்கள் பேரணி அமைதியை நிலை நாட்டும் முயற்சியே. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டி கோவையில் அமைதியை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கிலே பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழக அரசு மாதம் ஒரு முறை மின் அளவீடு முறையை அமலாக்க வேண்டும். இல்லையென்றால் இது தொடர்பாக தொடர் போராட்டம் மேற்கொள்வோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம். அதேபோல பீக் ஹவர்ஸ் சதவீதம் குறைப்பு ஒருபோதும் தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படாது. இது ஒரு ஏமாற்று வேலை.
தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தரமானது. மார்க்கெட்டிலும் நல்ல விலை போகக் கூடியது. இந்த தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டங்களில் வால்பாறையில் 600 குடும்பங்களின் வேலைவாய்ப்பை பறிக்க, கூடலூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு தேயிலை கழகத்தை மூடுவது ஏற்புடையது அல்ல. இந்த முயற்சியை கைவிட வேண்டும். நட்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள். இது தவறான காரணம். அப்படியல்ல, நிர்வாக சீர்கேடு தான். நிர்வாகத்தை சரி செய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும். மூடும் முயற்சியை கைவிட வேண்டும்.
மேலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு, 10% இட ஒதுக்கீட்டின் அறிக்கையை தருவேன். அதைத் தொட்டால் முடிவாகாது என கிருஷ்ணசாமி பேச மறுத்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“