கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை உட்பட குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு பொது கணக்கு குழுவினர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது;
2019-20 ல் நபார்டு வங்கியின் உதவியுடன் 19.48 கோடி அமராவதி நதி அமைப்பில் உள்ள பிரதான கால்வாய்கள், 18 அணைக்கட்டுகள் சேதமடைந்து கோவை மாவட்டத்தை சேர்ந்த பள்ளப்பாளையம் அணைக்கட்டு 2013ம் ஆண்டு புரனமைக்கப்பட்டது.
அதன் நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்று தணிக்கை குழுவினர் புகார் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் விசாரித்துள்ளோம். அதே போல் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பாலம் ஏறக்குறைய 4 ஆண்டுகளாக சரியான மண் பரிசோதனை செய்யாததால் தாமதம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
எதற்காக அரசு பணம் விரையம் ஆக்கப்பட்டது என்பதை பற்றி ஆய்வு செய்திருக்கிறோம். முடிந்தால் இதற்காக தங்கள் உறுப்பினர் ஒருவர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கலாம் என ஆலோசித்துள்ளோம்.
ஏற்கனவே 2021ல் 540 கோடி நிலுவையில் வைத்துள்ளார்கள். தற்போது மாநகராட்சி ஆணையாளர் 240 கோடி கடனை குறைத்துள்ளார். இது எல்லாம் பாராட்டுக்குரிய செய்திகள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாநகராட்சி வரி வசூலிலும் சாதனை செய்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் 2019-20 கால்வாய்கள் திட்டம், பாசன திட்டத்தில் சரியான முறையில் கையாளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை விசாரித்து இத்துறை சார்ந்த அலுவலர்களை சென்னைக்கு அழைத்து விசாரிக்க உள்ளோம். பின்னர் விரிவான அறிக்கை வெளியிடப்படும். தற்போது வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது எல்லாம் கடந்த கால ஆட்சியினுடையது. பணவிரையம் ஏற்ப்பட்டுள்ளது. அதனால் தான் தணிக்கை குழு உள்ளே வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதா என கேள்விக்கு பதிலளித்த அவர், இது குறித்து உறுப்பினர் ஈஸ்வரன் விரிவாக கேட்டிருக்கிறார். இதற்கு சரியான பதில் இல்லை, ஒரு மாத காலம் தான் ஆவதால் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பை இன்னும் நாம் பலப்படுத்த வேண்டும் தற்போது அது சரியான முறையில் இல்லை.
பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன அவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவையின் பொறுப்பு அமைச்சர் விவகாரத்தால் கோவையில் திறந்து வைக்கப்பட வேண்டிய திட்டங்களில் ஏதேனும் சிக்கல்கள் எழுமா? என்ற கேள்விக்கு, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை அதனை அவர்கள் சட்டரீதியாக எதிர்கொள்வார்கள்.
தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என பதில் அளித்தார். வெள்ளலூர் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஈஸ்வரன், அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கு காலியானால்தான் மேற்கொண்டு அதைப் பற்றி யோசிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என நினைப்பதாக பதில் அளித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.