/tamil-ie/media/media_files/uploads/2017/10/tamil-nadu-secretariat.jpg)
Tamil Nadu news today live updates
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை தமிழக அரசு
கடந்த 4 ஆண்டுகளாக நடத்தவில்லை என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, ’தி இந்து’ ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு, கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பு, 2011-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றபோதும், அதற்கடுத்து 2012-ஆம் ஆண்டிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
அதன்பின், 2014-ஆம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றதால், தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி வகித்த நிலையில், அந்தாண்டு மாநாடு நடைபெறவில்லை. 2015-ஆம் ஆண்டிலும் மாநாடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு, அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் நிறைவேற்றப்படுகிறதா என்ற திறனாய்வு, மாநில பிரச்சனைகள், அரசு அதிகாரிகளை மதிப்பிடுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள நடத்தப்படுகிறது. ஆனால், இந்த மாநாடு கடந்த 4 வருடங்களாக நடைபெறவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் டெங்கு இறப்புகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என்பதால், இந்தாண்டும் மாநாடு நடத்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறையின் முதன்மை செயலாளர் சத்யகோபால் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அதிகாரிகள் தலைமை செயலாளருடன் காணொளி மூலம் கலந்தாலோசிப்பதாகவும், சில சமயங்களில் முதலமைச்சரும் காணொளி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.