மருத்துவத் துறையில் புதிய ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்புக்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய ஊக்குவிப்புகளை அளிப்பதில்லை எனவும், இதற்காக போதிய நிதி ஒதுக்கீடு அளிப்பதில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கொரோனா தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தவும் நோய் பாதித்தவர்களை குணப்படுத்தவும் சித்த மற்றும் இந்திய மருத்துவத்தில் மருந்துகள் இருப்பதாக கூறி, இது தொடர்பாக ஆய்வுகள் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய மருத்துவ முறைகள் மருத்துவம் செய்து வருவதாகவும் இது பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடித்து அதில் நோயாளிகளை குணப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அபி ஆஷிஷ் மருத்து மூலம் விரைவாக குணப்படுத்தவும் நோயின் தாக்கத்தை குறைக்கவும் முடியும் என தான் கண்டறிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அரசு அதிகாரிகள் முன் பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டுமெனக் கோரி தான் இதுவரை தமிழக அரசிற்கு 4 கோரிக்கை மனுக்கள் அளித்தும் அந்த கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவில்லை கூறியுள்ள மாதேஸ்வரன், தன்னுடைய கண்டுபிடிப்பை சோதனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மிகச் சிறந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நாம் நாட்டில் இருப்பினும் புதிய கண்டுபிடிப்புகளில் நாம் குறிப்பிட்ட அளவு எட்டவில்லை என வேதனை தெரிவித்தனர்.
மருத்துவ துறையில் புதிய ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்புக்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய ஊக்குவிப்புகளை அளிப்பதில்லை எனவும், இதற்காக போதிய நிதி ஒதுக்கீடு அளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.
தடுப்பு மருந்துகளை பொறுத்தவரை நாம் இன்னும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவியபோது அதற்காக நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ஏன் தற்போது இந்திய மருத்துவ முறையில் மருந்துகள் உள்ளனவா என்பதை ஏன் ஆய்வு செய்ய கூடாது என கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான உத்தரவிற்காக வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.