சென்னை கோயம்பேடு சந்தை, கொரோனா பாதிப்பின் ஹாட் ஸ்பாட்களாக திகழ்ந்ததும், இங்கிருந்து 5 மாவட்டங்களுக்கு அதிகளவில் கொரோனா பரவிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும், கோயம்பேடு சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை.
வியாபாரிகள் மறுப்பு : இந்நிலையில் அந்த சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையை வேறுஇடத்துக்கு மாற்ற அரசு அறிவுறுத்தியது. அதை வியாபாரிகள் ஏற்க மறுத்தனர். இந்நிலையில் லாரிகள் வந்துசரக்குகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் வசதி கொண்ட 194 காய்கறி கடைகள் மட்டும் அந்த சந்தையில் இயங்க அனுமதிக்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் உள்ள மலர் மற்றும் பழக்கடைகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன.
கோயம்பேட்டில் இருந்து காய்கறி லாரி மூலம் சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திற்கு சென்ற இருவருக்கு தொற்று இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டது. அவர்களுடன் சென்ற 105 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் வியாபாரம் செய்தவர்கள், கூலித் தொழிலாளர்கள் என கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் 427 பேர் திரும்பியது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள், தங்களது சுய விவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டார்.
இதேபோல், கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் திரும்பிய 19 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் சிறுகளத்தூர், வஞ்சினபுரம், இடையத்தான்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய திருச்சி கூலி தொழிலாளிகள் 4 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வசிக்கும் தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து சொந்த ஊர்க்கு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 11 கிராமங்களை சேர்ந்த 83 பேரை சோதனை செய்ததில் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இவர்கள் அனைவரும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த 11 கிராங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த இளைஞருக்கு தொற்று உறுதியான நிலையில், அவரது தாய் மற்றும் அருகில் உள்ள கல்லூரி மாணவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து காய்கறி, பழம் வாங்கி வடபழனி காய்கறி சந்தையில் விற்று வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவரின் கடைக்கு வந்து சென்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.