தமிழகத்தில் இ-பாஸ் ரத்து எப்போது? ஆக.29-ல் முதல்வர் முக்கிய ஆலோசனை
Edappadi Palanuchami : முதல்வர் பழனிசாமி தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் வரும் 29-ம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. மருத்துவ நிபுணர் குழுவுடன் மாலை 3 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இ-பாஸ் நடைமுறை, பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் உடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
Advertisment
தமிழகத்தில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. எனவே மக்களுக்கான பொது போக்குவரத்தை கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அரசு தடை செய்துள்ளது. மிகவும் அவசியம் என்றால் மட்டும் இ-பாஸ் பெற்று வேறு மாவட்டங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவசிய காரணங்களுக்கும் இ-பாஸ் மறுக்கப்படுகிறது என்றும், அதில் முறைகேடுகள் உள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன. எனவே இ-பாஸ் வழங்குவதில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், வியாபாரிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த உத்தரவு கடந்த 17-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாத வகையில் இ-பாஸ் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மறுநாளில் இருந்து இந்த உத்தரவை புதுச்சேரி அரசு அமல்படுத்தியது.
இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறையில் தளர்வு செய்ததால் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகி விட்டதா? என்பது பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
தற்போது மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முடியுமா? என்பது பற்றி முடிவெடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் வரும் 29-ம் தேதி (சனிக்கிழமை) காலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. மருத்துவ நிபுணர் குழுவுடன் 29-ம் தேதி மாலை 3 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைகளில் ஊரடங்கு குறித்தும், இபாஸ் நீக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரின் கருத்துக் கேட்ட பிறகே ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil