சென்னையில் செயல்பட்டு வரும் 53 அம்மா குடிநீர் மையங்களை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்திடம் ஒப்படைக்க
மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர் மையங்களுக்கு மாநகராட்சி ஆண்டுதோறும் ரூ.5 கோடி செலவு செய்து வந்தது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலில் பேரில் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக குடிநீர் மையங்களை கையாளுவதற்கு ஏற்ற நபர்கள் இத்துறையில் இருப்பதால், அம்மா குடிநீர் மையங்களை குடிநீர் வழங்கல் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தி வரும் அம்மா குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 20 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. . 53 இடங்களில் இதற்கான குடிநீர் விநியோக மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
ஸ்மார்ட் கார்டு மூலம் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அம்மா குடிநீர் திட்டத்தை ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான குடிநீரை குடிநீர் வாரியம் இலவசமாக வழங்கி வருகிறது. பல இடங்களில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில் சென்னை குடிநீர் வாரியத் திடம் ஒப்படைத்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி 53 அம்மா குடிநீர் மையங்களை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“