முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஸ்டாலின், இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சித் தலைவர்கள், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்ற போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவருக்கு, ஸ்டாலின் அந்த மண்டபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இன்று நடைபெறவிருந்த அவர்களது திருமணம், போராட்டம் காரணமாக தள்ளிப் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் இளம் ஜோடி மாலை மாற்றிக்கொண்டனர். திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.