உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் அடுத்த மாதம் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் ஜூலை மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கபட்டது.
இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கி முதல் அமர்வு செப்டம்பர் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் 18 ஆம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிட வேண்டும், நவம்பர் 17 ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவையும் பின்பற்றவில்லை என தெரிவித்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியவற்றிற்கு எதிராக திமுக மாநிலங்களவை எம்.பி ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கடந்த மாதம் 3 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் உள்ள மாநில தேர்தல் ஆணையர், எம் மாலிக் பெரோஸ் கான், டி.எஸ் ராஜசேகர், மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர், தலைமை செயலாளர் கிரிஜா வைதியநாதன், ஊரக வளர்ச்சி, பஞ்சயத்துராஜ் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர்.
ஹர்மந்தர் சிங், சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம, பேரூராட்சிகள் இயக்குனர் பழனிச்சாமி, பெரு நகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அவர்களை தண்டிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபநி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்
ஆஜரானர். நீதிமன்றம் உத்தரவை அமல் படுத்தாமலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வார்டு வரையறை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் உள்ளனர்.
ஆனால் கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்தலை நடத்த எந்த விதமான தடையும் விதிக்கமால் வழக்கை தள்ளிவைத்து உள்ளனர். இந்த நிலையில்கூட தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் வாதிட்டார்.
மாநில தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கூறினார்.
இதனை அடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர், மற்றும் மாநில ஆணையத்தின் செயலாளர் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 6 தேதி ( நவம்பர் 6 ) உரிய பதில் மனுவுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.