கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த மாதம் 23-ம் தேதி அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேசா முபின்
என்பவர் உயிரிழந்தார். இவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்ததில் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான் ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து வழக்கு என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு முகமைக்கு) மாற்றப்பட்டது. காவல் துறையின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்பு, ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் இன்று கோவை சிறையில் இருந்து, சென்னை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை சிறையில் இருந்த 6 பேரும் காவல்துறை பாதுகாப்புடன் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டனர்.
என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்வதற்காக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil