தமிழகத்தில் நேற்று மட்டும் ( மார்ச் 22ம் தேதி) 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் இதன் கோரத்தாண்டவம் கொடூரமாக உள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு சர்வதேச அளவில் இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் இத்தாலியில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், இந்தியாவில் கொரோனா தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். இந்தியாவில், இதுவரை இந்த பாதிப்பிற்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் 9 பேர்
தமிழகத்தில் கடந்த 4 ம் தேதி, முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. நேற்று ( மார்ச் 22) மட்டும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த நபர் மற்றும் துபாயில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த நபர் என்ற இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தின் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட நாட்டின் 80 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.