கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் கருணாகரன், புதுநகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, "என்னுடைய மூத்த மகள் சாதனாவுக்கு வயது 13. உடல்நிலை சரியில்லை. அவரை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன்.
அங்கு எனது மகளை பரிசோதனை செய்த மருத்துவரிடம் எனது மகளுக்கு சளி பிரச்னை இருப்பதாக தெரிவித்தேன். இதை அடுத்து எனது மகளை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமிக்கு ஊசி போடவும், மாத்திரையும் எழுதி சீட்டு கொடுத்தார்.
அந்த சீட்டைப் பெற்றதால் மாத்திரை வாங்கிக் கொண்டு ஊசி போடும் இடத்திற்கு வந்தேன். அங்கிருந்த செவிலியர் என்னிடம் சீட்டை வாங்கி கூட பார்க்காமல் எனது மகளுக்கு இரண்டு ஊசி போட்டார்.
அப்போது நான் எதற்கு இரண்டு ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், எனது மகளுக்கு சளி பிரச்னை தான் என்றேன். அதற்காக மலுப்பலாக பதில் அளித்தார். இதற்கிடையில் எனது மகளுக்கு மயக்கம் ஏற்பட்டது.
உடன் அவரை உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் சேர்த்து உள்ளேன். ஆகவே எனது மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர் பணியில் இருந்த, மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil