Advertisment

மாமல்லபுரத்தில் நள்ளிரவில் கரையை கடக்கும் மாண்டஸ்: சென்னை வானிலை மையம் அறிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் இன்று நள்ளிரவுக்கு பின் கரையை கடக்கிறது.

author-image
WebDesk
New Update
Cyclone Mandous

Cyclone Mandous news

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இது இன்று காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும்.

Advertisment

இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னையில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். மாமல்லபுரத்தில் புயல் கரையை கடந்தாலும், கரையை கடக்கும் இடத்துக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் புயலின் தாக்கம் இருக்கும்.

இதன் காரணமாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.

மேலும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இந்த மாவட்டங்களில் அதி கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடிய காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும், கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை (டிசம்பர் 10) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 12 குழுக்கள் அனுப்பப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்றனர்.

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment