ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, விமானப் படை முக்கிய பங்காற்றின. இது தொடர்பான வீடியோ வெளியானது.
ஓகி புயல், கன்னியாகுமரி மாவட்டத்தையும் கேரளாவையும் பலமாக தாக்கியது. இதனால் இங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஓகியில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள மீனவர்களும்தான்!
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளா மீனவர்களைப் பொறுத்தவரை ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் செய்பவர்கள்! பெரிய படகுகளில் உணவுப் பொருட்களுடன் சென்று 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கடலில் தங்கியிருந்து மீன்களை பிடித்து வருபவர்கள்!
ஓகி புயல் தாக்குதலின்போது இவர்களில் நூற்றுக் கணக்கானோர் நடுக்கடலில் சிக்கினர். இவர்களை மீட்க தமிழக மற்றும் கேரள அரசுகளின் வேண்டுகோள் அடிப்படையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துரித நடவடிக்கை எடுத்தார்.
நிர்மலா சீத்தாராமன் உத்தரவுப்படி இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, இந்திய விமானப் படை ஆகியன கன்னியாகுமரி மற்றும் கேரள கடற்பகுதியில் சுற்றிச் சுழன்றன. கடலோர காவல் படையே 9 கப்பல்களையும், 2 விமானங்களையும் அனுப்பி வைத்தது. இந்தப் படைகளின் ஆப்ரேஷனில் இதுவரை 52 மீனவர்கள் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழக மீனவர்களும் கேரள மீனவர்களும் அடங்குவர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்து தமிழக மீனவர்களை அழைத்து வர, அதிகாரிகள் குழுவை தமிழக அரசு அனுப்பியிருக்கிறது.