தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாநிலத்தில் கேரள மாநில எல்லையையொட்டிய பகுதிகளில் பரவிய டெங்கு காய்ச்சல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கடலூர், சேலம் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் டெங்கு பரவியது. பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக இந்த டெங்கு பரவுவது அதிகமானது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக சுகாராரத்துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றபோதிலும், அதனால் அதிக பலன் ஏற்பட்டதாக தெரியவில்லை. டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. இதில் குறிப்பிடும்படியாக டெங்குவால் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, டெங்கு மற்றும் மர்மகாய்ச்சலுக்கு இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 சிறுமிகள் உயிரிழந்தனர். அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் மகள் 3 வயது ஜாய்பெனிட்டா, அம்பத்தூர் புதூர் பெருமாள்கோயில் பகுதியில், ஆனந்தன் என்பவரின் மகள் திவ்யபாரதி (6) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதேபோல, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சனா (6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். மதுரவாயல் வேல்நரை சேர்ந்த ராஜூ என்பவரின் 1½ வயது குழந்தை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.
மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என மக்களை வாட்டி வதைக்கும் இது போன்ற அச்சுறுத்தும் நோய்களால், சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 11,000 பேர் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 200 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. சென்னையில் 1500 பேர் இது போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனராம். குறிப்பிடும்படியாக, கடந்த வாரத்தில் மட்டும் சென்னையில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவற்றில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் என்பது கவனிக்கத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் கிஷோருக்கு(3) திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியை அடுத்துள்ள மரவபட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 25) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் மரவனேரி கோட்டூர் காலனியைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவரின் மகன் ஸ்ரீதர், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாணவர் ஸ்ரீதர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்த வீரய்யா, கூத்தம்மை ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சரவணன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
காய்ச்சல் வந்தவுடன் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாக் கூடாது. மெடிக்கலில் சென்று மருந்துமாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதை விட்டுவிட்டு, அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், போதிய வசதிகள் இல்லாமல் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.