அதிமுக இணைப்புக்கு பிறகு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அமைச்சர் ஜெயகுமாரிடம் இருந்து சில துறைகள் அவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன.
அதிமுக இணைப்புக்கு பிறகு, அடுத்தடுத்த முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர் பொறுப்பை ஏற்க சம்மதித்து அணிகள் இணைப்புக்கு உடன்பட்டார். துணை முதல்வர் எந்த அந்தஸ்தை அவருக்கு கொடுத்தாலும், நிதி மற்றும் வீட்டு வசதி என இரு இலாக்காக்கள் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டதில் அவரது ஆதரவாளர்களுக்கு திருப்தி இல்லை.
ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளரான மாஃபாய் பாண்டியராஜனுக்கும் முக்கியத்துவம் இல்லாத தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கலாச்சார துறையை கொடுத்ததை அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே ஓ.பி.எஸ். தரப்பை திருப்திபடுத்தும் வகையில் பதவியேற்ற மறுதினமான ஆகஸ்ட் 22-ம் தேதியே (இன்று) ஓ.பி.எஸ்.ஸுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அமைச்சர் ஜெயகுமார்
நிதி, வீட்டு வசதித்துறையுடன் அமைச்சர் ஜெயகுமார் வசமிருந்த திட்டம், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு ஆகிய இலாகாக்கள் கூடுதலாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஒதுக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரைப்படி இந்த அறிவிப்பை ஆளுனர் வித்யாசாகர்ராவ் இன்று வெளியிட்டார்.
இதனால் ஜெயகுமார் வசம் மீன்வளத்துறை மட்டுமே இருக்கும் சூழல் உருவானது. அவரை சமாதானப்படுத்தும் விதமாக முதல்வர் எடப்பாடி வசமிருந்த அரசு ஊழியர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையை ஜெயகுமாருக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார் முதல்வர். இனி ஜெயகுமார், மீன்வளத்துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
ஆட்சியையும் கட்சியையும் குழப்பமில்லாமல் கொண்டு செல்ல, சற்றே நெகிழ்வான போக்கையும் கடைபிடிக்க எடப்பாடி தயாராகியிருப்பதை இந்த மாற்றம் காட்டுகிறது.