அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகுவது வழக்கம். இந்நிலையில், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் நரசிம்ம ராவ் என்று அவர் பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன் தடுமாற்றம் பேச்சு:
திண்டுக்கல் அருகே வேடசந்தூர், கல்வார் பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. அதில் வனத்துறை அமைச்சர் தீண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கு பெற்றனர்.
இந்த விழாவில் பேசிய அவர், “இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பரமசிவனின் அழைப்பை ஏற்று நானும் அமைச்சர் விஜயபாஸ்கரும் இங்கு வந்துள்ளோம். துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பரமத்திவேலூரில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார், அவர் இங்கு வருவார். பின்பு டெல்லி சென்று பிரதமர் நரசிம்ம ராவிடம் பேசுவார்” என்று கூறினார்.
சற்று தடுமாறிய சீனிவாசனின் பேச்சால் நிகழ்ச்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர் பேசிய அந்த உரையாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.