கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வாழ்வு சிறக்க, தமிழக மக்கள் அனைவரும் கதர் துணிகளை அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கதர் ஆடைகளை நெசவு செய்யும் கிராமப்புற கதர் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் நோக்கில், காதி நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நலவாரியத்தின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் அவ்வாரியத்தைச் சேர்ந்த 1134 உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.
விபத்து காப்பீட்டு நிதியுதவி, இயற்கை மரணம் அடைந்த பயனாளி குடும்பத்திற்கான நிதியுதவி, திருமண நிதியுதவி, மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான நிதியுதவி, கிராமிய நூற்பு மையத்தில் பணிபுரியும் நூற்பாளர்களுக்கு கழிப்பறை வசதி, ராட்டைகள் மற்றும் தறி உபகரணங்களை பழுதுநீக்கம் செய்திட நிதியுதவி என மொத்தம் 54 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கும், சர்வோதய சங்கங்களுக்கும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தள்ளுபடி மானியமான ரூ.17 கோடி இந்த ஆண்டு முதல் ரூ.34 கோடி உயர்த்தி தமிழ்நாடு அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது.
கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வாழ்வு சிறக்க, தமிழக மக்கள் அனைவரும் கதர் துணிகளை அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.