காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. மார்ச் 29ம் தேதி காலக்கெடு முடிவடைந்தும் மத்திய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ‘ஸ்கீம்’ குறித்து விளக்கம் கேட்ட மத்திய அரசு அரசுக்கு மீண்டும் மே 3ம் தேதி வரை காலக்கெடு அளித்தது உச்சநீதிமன்றம். நேற்று இந்தக் காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு காவிரி வரைவு திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. இதற்குக் கர்நாடக தேர்தலைக் காரணமாக சுட்டிக்காட்டியது. இவ்வாறு இழுபறியாகும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஏப்.1ம் தேதி முதல் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. தற்போது அடுத்தகட்டமாக ஆலோசிக்க மே 8ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக முதல் அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் பாஜக தவிர பிற கட்சிகள் பங்கேற்றனர். முதல் கூட்டத்தில் போராட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஏப் 3ம் தேதி வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது. பின்னர் ஏப். 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம், ஏப். 7ம் தேதி காவிரி உரிமை மீட்பு பயணம் தொடக்கம் என திட்டமிட்டபடி போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் கடந்த மாதம் மோடி தமிழகம் வந்தபோது கருப்புக் கொடி காட்டும் போராட்டமும் மற்ற கட்சிகளுடன் இணைந்து திமுக நடத்தியது.
தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு மீறியுள்ள நிலையில் இந்த வழக்கு மே 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அதே நாளில் காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது.
திமுக அறிவித்துள்ள இந்தக் கூட்டத்தில் அவர்களின் தோழமை கட்சிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.