திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி கழக பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் அக்டோபர் 25ம் தேதி நடைபெறும் திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இன்று வெளியான அறிக்கையில், "மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 25-10-2018 வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தகுதி நீக்க வழக்கு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த 17ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வந்தால் அதை சந்திப்பது குறித்தும் விவாதம் நடத்தப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், நாளை மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.