முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வுடன், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள், ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்று கடிதங்களை கொடுத்தனர்.
அதன் பின் பேசிய ஸ்டாலின், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை என அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். திமுக சார்பில் 89 எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸ் சார்பில் 8 எம்.எல்.ஏ-க்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 என மொத்தம் 98 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் 21 பேர் உள்ளர். ஆக மொத்தம் 119 எம்.எல்.ஏ-க்கள் இந்த ஆட்சிக்கு எதிராக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு 114 மற்றும் எதிர்ப்பு 119 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனவே, சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். இது தொடர்பான நடடிவக்கையை ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தையும் நாடுவோம், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்று ஆளுநரிடம் கூறினோம்" என தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது, "ஜெயலலிதா தான் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்ற தீர்மானம் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது அவர்களது உள்கட்சி விவகாரம். ஆளுநர் தனது கடமையை ஆற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நாங்கள் ஏற்கனவே ஆளுநரை சந்தித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இல்லையெனில், நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்பதையும் தெளிவாக ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். அதன் அடிப்படையில் இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம்.
சட்டமன்றம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டுள்ளதால், அதை மீண்டும் கூட்டுவதற்கு ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர்கள் சட்டமன்றத்தை கூட்டினால், திமுக நிச்சயமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும். ஒருவேளை சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முதல்வருக்கு தைரியம் இருந்தால், அவரே முன்சென்று ஆளுநரிடம் 'பெரும்பான்மையை நிரூபிக்க நான் தயார்' என்று கூறி சட்டமன்றத்தை கூட்டச் சொல்லலாம்.
தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக 'திமுக தான் எங்கள் எதிரி' என தினகரன் கூறியிருக்கிறார். அதைப் பற்றி பேசி நான் விளம்பரம் தேடிக் கொள்ள விரும்பவில்லை. திமுக என்றைக்குமே கொள்ளைப்புறமாக ஆட்சியைப் பிடிக்காது" என்றார்.