அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அதிமுகவினர் திரளாக பங்கேற்பதற்காக மாவட்டம் வாரியாக மூத்த நிர்வாகிகள் சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்பியும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பி முனுசாமி, “ஒ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் அரசியலில் அனாதையாகி விட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கியபோது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது தான் குற்றச்சாட்டு வைத்தார்.
இன்று அதே சசிகலாவுடன் அரசியல் செய்ய நினைக்கிறார். இது அவருடைய கீழ்த்தரமான அரசியல் சிந்தனையை தான் காட்டுகிறது.
மதுரை மாநாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின், `தர்மயுத்தம்' நடத்திய ஓ.பன்னீ்ர்செல்வம் தற்போது டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொடநாடு பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில் அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கொடநாடு வழக்கை கையில் எடுத்து எதிரிகளுடன் கூட்டணி சேர்ந்து அதுகுறித்து தற்போது பேசி வருகிறார்.
ஒ.பன்னீர்செல்வத்திற்கு நேற்று சசிகலாவும் தினகரனும் எதிரியாக இருந்தார்கள். இன்று அவர்கள் அவருக்கு நண்பராகி விட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி எதிரியாக மாறி விட்டார்.
நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவராக ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார். அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது அரசின் திட்டங்கள் குறித்து தவறான தகவல் பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படத் தான் செய்யும் அது இயல்பு தான். அது தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி” என்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர்கள் சீனிவாசன், பொன் செல்வராஜ், முன்னாள் கொறடா மனோகரன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அதிமுக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.