நூர்ஜகான் பேகம் மறைவு : திமுக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், தலைமைக் கழக பேச்சாளாராகவும் இருந்து வந்த திமுக மாநில மகளிர் அணி புரவலர் நூர்ஜகான் பேகம் உடல் நலக் குறைவால் காலமானார். மதுரையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் நூர்ஜகான் பேகம். சிகிச்சை பலனின்றி 23ம் தேதி உயிரிழந்தார்.
அவர் இறந்த பின்பு, அவருடைய சொந்த ஊரான திண்டுக்கலில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
நூர்ஜகான் பேகம் மறைவு - திமுகவினர் அஞ்சலி
திமுக மாநில மகளிரணி தலைவி கனிமொழி நூர்ஜகான் பேகத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து திண்டுக்கல் சென்றுள்ளார்.
அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி “நூர்ஜகான் பேகம் மிக்க தைரியம் கொண்டவர், சோதனையான காலகட்டத்தில் ஒரு தாயைப் போல் என்னை கவனித்தவர்” என்று கூறினார்.
முக ஸ்டாலின் இரங்கல்
"திராவிட உணர்வுமிக்க - துடிப்பான - ஒப்பற்ற தொண்டரை கழகம் இழந்து விட்டது" என்று கூறி அவரின் இறப்பிற்கு ஆழ்ந்த வருத்தத்தினை பதிவு செய்திருக்கிறார் முக ஸ்டாலின்.
கழக மகளிரணிக்கு மட்டுமின்றி - ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்கும் திருமதி நூர்ஜகான் பேகம் அவர்களின் மறைவு ஈடுகட்ட முடியாத இழப்பு என்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.