திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' எனும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த 7 மாதங்களாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், திமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பி.இ.ஜி டியூப் மாற்றப்படுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சாதாரண நடைமுறை செக்கப் தான். அவர் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என குறிப்பிட்டிருந்தார்.
காலை 6.45 மணிக்கு கருணாநிதிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை தொடங்கியது. நான்கு மணி நேரம் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், தொண்டையில் உணவு செலுத்துவதற்கான குழாய் வெற்றிகரமாக மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தனது கோபாலபுரம் வீட்டிற்கு வந்தடைந்தார்.