ஆர்.கே நகர் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில் திருப்தியில்லை என கூறி திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல்ஆணையம் வழக்குப் பதிவு செய்யப்பட உத்தரவிட்ட விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, அவர் அது குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை என்று கூறியிருக்கிறார்.
தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள இது தொடர்பான அறிக்கை இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தலைமை செயலகத்திற்கு வந்துள்ளது. ஆனால், முதலமைச்சரிடம் இது குறித்து கேட்டால் ஒன்றும் தெரியாது என்கிறார். இதன் மூலம் இந்த ஆட்சி செயலற்ற ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு சாட்சியை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அமைச்சர்கள் வீடு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ரொக்கமாக ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தான் ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அந்த ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட பல அமைச்சர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதோடு டிடிவி தினகரனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 18-ம் தேதியே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியைத் தான் நான் அவையிலே கேட்டேன்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு பெரிய விளக்கத்தை அளிக்கப்போகிறார் என நாங்களும் காத்திருந்தோம். ஆனால், அப்போது எழுந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் தொடர்பாக புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஒருவரியில் பதில் சொல்லிவிட்டு அமர்ந்து விட்டார்.
நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் வழக்குப் பதிவு எப்போது செய்யப்பட்டுள்ளது? யார் யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்பது தான். ஆனால் முதலமைச்சர் அது குறித்து ஒன்றும் சொல்லவில்லை.
இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை. மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை, ஆனால் அந்த காவல்துறை யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்றால் முதலமைச்சர் எடப்பாடியின் தலைமையின் கீழ் இருக்கக்கூடிய துறையில் தான்.
அவரைப் பற்றி அவரே விசாரணை செய்ய முடியுமா? விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது, பல அமைச்சர்கள் சோதனை செய்யவிடாமல் தடுத்தனர். எனவே காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால் இந்த விவகாரத்திரத்தில் உரிய விசாரணைக்கு உத்தரவிட முடியாது.
எனவே முதலமைச்சர் பதவி விலகுவதோடு சம்பந்தப்பட்டிக்கூடிய 9 அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். இந்த கோரிக்கையைத் தான் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நான் சட்டமன்றத்தில் எடுத்து வைத்தேன்.அவற்றையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.