கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும் ஆட்சியைப் பிடித்த திமுக வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் அனைத்து இடங்களையும் திமுகவே பிடிக்கும் என்று கூறும் விதமாக “கொங்குல இனி எவனுக்கும் இல்ல பங்கு” என்று தி.மு.க.வினர் சுவரொட்டியை ஒட்டி கோவையை கலக்கி வருகின்றனர். மேலும், ‘தெறிக்க விடலாமா, உள்ளாட்சித் தேர்தலில்’ என்று என்று திமுகவினர் போஸ்டர்களை ஒட்டி நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே கலக்கி வருகின்றனர். உண்மையில், கோவையில் திமுக தெறிக்க விடுமா?
கோவையில் அவிநாசி சாலையில் திமுக நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட “கொங்குல இனி எவனுக்கும் இல்ல பங்கு” என்ற சுவரொட்டியும் ‘தெறிக்க விடலாமா, உள்ளாட்சித் தேர்தலில்’ என்ற சுவரோட்டியும் கொங்கு மண்டலத்தை கலக்கி வருகிறது. இது தமிழ்நாட்டில் ஆளும் திமுக மேற்கு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது என்பதைக் காட்டுகின்றன. மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்திருந்தலும் மீண்டும் தோல்வியை சந்திக்கும் மனநிலையில் திமுக இல்லை என்பதையே “கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல” சுவரொட்டி வாசகம் குறிப்பிடுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 275 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை கட்சித் தொண்டர்களிடம் கூறினார். மற்ற மாவட்டங்களை விட கோவையில் தேர்தலில் போட்டியிட திமுகவினர் முன்னதாகவே விண்ணப்பங்களை பெற தொடங்கி உள்ளனர்.
திமுகவினர் கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான களத்தை தயார் செய்து வருகின்றானர். செந்தில் பாலாஜியை வைத்து ‘மக்கள் சபா’ நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி எல்லையில் உள்ள 100 வார்டுகள் உட்பட மாவட்டம் முழுவதும் 150 இடங்களுக்குச் சென்ற செந்தில் பாலாஜி, அப்பகுதி மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.
இதனிடையே, முதலமைசர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை (நவம்பர் 22) கோவை மாவட்டத்திற்கு வந்து புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த ஊரான கோவை மற்றும் சேலத்துக்குத்தான் இப்போதைக்கு திமுக முன்னுரிமை அளித்து கவனம் செலுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. செந்தில் பாலாஜி கோவை மாநகராட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டப் பொறுப்பாளரக நியமிக்கப்பட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி போன்ற இடங்களில் மூன்று நாள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நேரு தொடங்கி வைத்தார். சேலத்தில், “மக்களின் அனைத்து கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்தார்.
இதேபோன்ற ஒரு நடவடிக்கையைத் தான் திமுக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்துகளில் ‘தீர்வு தளம்’ என்ற உரையாடும் தளத்தை ஏற்பாடு செய்து வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மதுரை, திருச்சியில் திமுகவினர் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். மதுரையில் திமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், “தலைவர்கள் சீட் கேட்டு தீவிர பிரச்சாரம் நடக்கிறது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களை சென்றடைய மழை சூழ்நிலையைப் பயன்படுத்துகின்றனர். திருச்சியில் உள்ள ஆளுங்கட்சியினர், ஒரு வாரத்தில் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், திமுகவுக்கு எதிர் முகாமில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காக பாஜக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக இன்னும் தொடங்கவில்லை. நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜக தொண்டர்களை நவம்பர் 7 முதல் விண்ணப்பங்களை அளிக்குமாறு பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், மழை காரணமாக விண்ணப்பங்கள் அளிப்பது மெதுவாக நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும், பாஜக முக்கிய தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குழுவை அமைத்துள்ளது. அதிமுகவினர் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனால், கோவையில், “கொங்குல இனி எவனுக்கும் இல்ல பங்கு” என்றும் ‘தெறிக்க விடலாமா, உள்ளாட்சித் தேர்தலில்’ என்று சுவரொட்டி ஒட்டி கோவையை கலக்கி வரும் திமுகவினர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிஜமாகவே தெறிக்க விடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.