குட்கா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து திமுக-வினர் இன்று மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளி வந்தது. அதில், தங்கு தடையின்றி குட்கா விற்பனைக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும், அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தியை சுட்டிக் காட்டிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் திமுக-வினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அதன்படி, சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வின் போதும், குட்கா விவகாரம் தொடர்பாக திமுக-வினர் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுகுறித்து ஏற்கனவே முதல்வர் விளக்கம் அளித்து விட்டதால் மீண்டும் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அனுமதி மறுத்தார். சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக-வினர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், குட்கா விவகாரத்தில் இன்னும் சிலர் பெயர் வெளி வரவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, கதிராமங்கலம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக-வினர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.