சென்னையில் உள்ள எம்.ஐ.டி.க்கு டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், விஞ்ஞானிகள் என்று அனைவர் மனதிலும் நீங்கா இடம்பெற்றிருக்கும் அணு விஞ்ஞானி இந்தியாவின் ஒட்டுமொத்த இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.
"வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தொழில் நுட்பம்" ஆகியவற்றில் இந்தியா வியத்தகு முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாணவர்கள் மத்தியில் தனது இறுதி நாட்கள் வரை பயணித்து வந்தவர். அவர் வகுத்துக் கொடுத்த நேர்மை, எளிமை, யாரும் சென்று எளிதில் சந்திக்கும் வாய்ப்பு- அனைத்திற்கும் மேலாக எல்லாத் தரப்பு மக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் உள்ளிட்டவை இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமல்ல- அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பால பாடமாக இருக்கிறது.
இந்த இரண்டாவது நினைவுநாளில் அவருக்கு ராமேஸ்வரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றாலும், சென்னையில் உள்ள எம்.ஐ.டி.க்கு டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் என்று ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இளைய சமுதாயத்தின் விடி வெள்ளியாக திகழும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகழஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.