சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் டாக்டர்.வி.எம்.தாமஸ் என்பவர் சென்னை ஃபெர்ட்டிலிட்டி சென்டர்(CFC) என்ற பெயரில் குழந்தையின்மை சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதே மையத்தில் பெரம்பூர் பட்டேல் சாலையில் வசிக்கும் டாக்டர். ரம்யா ராமலிங்கம்(35) என்பவர் வேலை செய்தார். குழந்தையின்மை மருத்துவ சிகிச்சை நிபுணரான டாக்டர் ரம்யாவின் சிறந்த சிகிச்சை காரணமாக நோயாளிகள் வருகை அதிகரித்தது. மருத்துவர்கள் தாமஸும், ரம்யாவும் தொலைக்கட்சிகளில் நிகழ்ச்சிகள் கூட நடத்தினர்.
இதனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு அவர்கள் சென்டரில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, தாமஸ் பங்களாதேஷிலும் கிளினிக் துவங்கினார். இந்நிலையில் மூன்றாண்டுகள் அங்கு பணியாற்றிய ரம்யா, வேலையிலிருந்து விலகி, தனியாக கோயம்பேடு அருகே கிளினிக் ஒன்றை துவங்கினார்.
இதைத் தொடர்ந்து, அவர்களது வாடிக்கையாளர்கள் ரம்யாவின் கிளினிக்குக்கு செல்லத் தொடங்கினர். இதனால், தாமஸ் நடத்திவந்த கிளினிக்கில் கூட்டம் குறையத் துவங்கியது. இதை அறிந்த தாமஸ், மீண்டும் ரம்யாவை தனது கிளினிக்கில் சேரும் படி அழைத்து இருக்கிறார்.
ஆனால், இதனை மறுத்துவிட்ட ரம்யா, தான் தனியாகவே கிளினிக் நடத்த விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தாமஸ், ரம்யாவை கொலை செய்ய கூலிப் படைகளை ஏற்பாடு செய்தார்.
சென்னை எண்ணூரை சேர்ந்த பழனி(எ) பழனிசாமி, முகிலன் ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளார். இதில் தாமஸ் கிளினிக்கில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யோவனா, சத்யகலா, பவானி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். ரம்யா கிளினிக்கிலிருந்து வீடு திரும்பும் நேரத்தை கணக்கிட்டு, பெண் வேடமிட்ட பழனிசாமி அவர் வீட்டருகில் மறைந்திருக்க, இரவு கிளினிக்கிலிருந்து ரம்யா வீடு திரும்பி தனது வீட்டிற்குள் வண்டியை நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த பழனி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரம்யாவின் உடலில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கைகள், முதுகு என பல இடங்களில் சரமாரியாக வெட்டுகள் விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தவர் சத்தம் போட கொலையாளி பழனி தப்பிச் சென்றுள்ளார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்யா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ரம்யா வெட்டப்பட்டது பற்றி அவரது தாயார் தனது மகளை டாக்டர் தாமஸ் ஏற்கனவே கொலை செய்வேன் என்று மிரட்டியிருந்தார் என்று புகார் அளிக்க, போலீஸார் டாக்டர் தாமஸை பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கூலிப்படை ஏவி ரம்யாவை கொலை செய்ய ஏற்பாடு செய்ததாக தாமஸ் ஒப்புக்கொண்டார்.
தாமஸ் அளித்த தகவலின் பேரில் பழனி (எ) பழனிசாமி, முகிலன், தாமஸ் கிளினிக்கில் பணியாற்றும் யோவனா, சத்யகலா, பவானி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.