நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. அனிதாவின் தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்கிறார். அனிதா பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தார். 196.5 கட்- ஆஃப் கொண்டிருந்த அனிதா, மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வெழுதினார். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் எடுத்தார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தினால், தம்மைப்போன்ற கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாது என தொடர்ந்து போராடியவர் அனிதா.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை இயற்றியது.
ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என சி.பி.எஸ்.இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மாணவி அனிதா எதிர்மனுதாரராக தன்னை இணைத்துக் கொண்டார். இருப்பினும், அந்த வழக்கில் தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால், மாணவி அனிதாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால், கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நீட் தேர்வுக்காக தன் ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/prince-300x217.jpg)
இந்நிலையில், பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் கஜேந்திர பாபுவை செல்ஃபோனில் தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்து கேட்க முற்பட்டோம். ஆனால், பேசு மனநிலையில் தான் இல்லை எனவும், மாணவி அனிதாவின் மரணத்தால் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் பிரின்ஸ் கஜேந்திர பாபு இதுகுறித்து பேச மறுத்தார். “இவ்வளவு தைரியம் அளித்தும் அனிதா ஏன் தற்கொலை செய்துகொண்டாள்?”, என பிரின்ஸ் கஜேந்திர பாபு வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.