அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளதால், இபிஎஸ் ஒபிஎஸ் ஆகிய இரண்டு அணிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிமுக இபிஎஸ் அணி சார்பில், கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில், தான் கையெடுத்திடுவதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும், தம்மை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்து அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி இ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இ.பி.எஸ் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது ஒபிஎஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடையீட்டு மனு மீது பிறப்பிக்ககப்படும் உத்தரவிற்கும், பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒபிஎஸ் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவும் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும்போது அதிமுகவின் பிரதிநிதி நான் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோர முடியாது. இது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் குறுக்கிடும் நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க முடியாது. ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை. மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் கேள்விக்குரியதாக உள்ளது.
ஆகையால் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான யாரும் ஆட்செபனை தெரிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாரேனும் இரட்டை இலை சின்னம் கேட்டால் அது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள். என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் இபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil