முதல்வர் பழனிசாமி அண்ட் கோ வீட்டுக்கு செல்வது உறுதி என டிடிவி தினகரன் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.
ஆளுநரிடம் முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் என கடிதம் கொடுத்த 19 எம்எல்ஏ-க்களில் 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து, 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவை செயலர் பூபதி கடிதம் அனுப்பியுள்ளார். அதேபோல், கெசட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக இதுபோன்ற நடவடிக்கைக்கு பின்னர், சில நாட்கள் கழித்தே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
சபாநாயகரின் இந்த தகுதி நீக்க நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் அணியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி அண்ட் கோ வீட்டுக்கு செல்வது உறுதி என டிடிவி தினகரன் திட்டவட்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பழனிச்சாமிக்கு மெஜாரிட்டி இல்லை என கடந்த மாதமே அனைவர்க்கும் தெரியும். இதுகுறித்து ஆளுனரிடமும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டி இல்லை என ஆளுநருக்கு தெரிந்தும் அவர் காலம் தாழ்த்தியதால் தான இந்த ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என்றார்.
மேலும், ஜெ-ஜா அணி என்றிருந்த போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட அதே சபாநாயகர் தனபால் தற்போது இது போன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இதை சபாநாயகரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த உத்தரவுக்கு நீதிமன்றத்தை நாடி நாங்கள் தடை வாங்குவோம். நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் அணியினரை விட்டு விட்டு, பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கோரியவர்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய தினகரன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை. பழனிசாமி மற்றும் அவரது சகாக்கள் விரைவில் வீட்டுக்கு செல்வது உறுதியாகி விட்டது என்றும் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.