நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் இன மக்கள் குறித்து தவறாகப் பேசியதாக எழுந்த புகாரில், ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும், காவலதுறையினர் அளித்த சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான் அருந்ததியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியது அருந்ததியர் மக்கள் இடையே பெரும் எதிர்ப்பு எழுந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜயநகர பேரரசு நிறுவிய பிறகு உங்கள் மன்னர்களுக்கு செய்ததை போல் எங்களுக்கு பட்டாடை செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள். வேறு ஆளை பாருங்கள் என்று அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் குஜராத்தில் இருந்து சவுராஷ்டிராக்களை இந்த விஜயநகர மன்னர்கள் இறக்கினார்கள்.
கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அதைப்போல எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் ஆதிக்குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள். தன் மானம் மிக்கவர்கள் தமிழர்கள். ஜாதியை சொல்லி வாக்கை குறைத்துவிட முடியாது. இந்த தமிழ்நாடு நூலிழையில் தவறு பண்ணிருச்சு. அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனிடம் போயிருந்தால் தமிழ்நாடு உருப்பட்டிருக்கும். நாமும் உருப்பட்டிருப்போம். நாங்கெல்லாம் கட்சி ஆரம்பிச்சிருக்க மாட்டோம். கடைசி வரை ஒரே மனைவியுடன் வாழ்ந்த தலைவன் நெடுஞ்செழியன் தான்” என்று சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அருந்ததியர்களை விஜயநகர் பேரரசு காலத்தில் ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்ற சீமானின் பேச்சுக்கு அருந்ததியர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சீமானின் பேச்சு அருந்ததியர் இன மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி அருந்ததியினர் கூட்டமைப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தார்கள்.
அருந்ததியர் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செப்டம்பர் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.